நாகப்பட்டினம் - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை; மாற்றுவழியில் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்

2

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வழியாக நாகப்பட்டினம் முதல், துாத்துக்குடி வரை புதிய நான்கு வழி பசுமை கடற்கரை சாலை அமைக்கும் திட்டத்தை ஈர நிலங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், இதற்குரிய நிலங்களை கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


மத்திய அரசின் 'பாரத் மாலா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை வாயிலாக நாகப்பட்டினம் முதல், துாத்துக்குடி வரை புதிய நான்கு வழி கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு, 7,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்துள்ளனர். இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


நாகப்பட்டினத்தில், 28.7 கி.மீ., திருவாரூரில், 40.3 கி.மீ., தஞ்சாவூரில், 40.6 கி.மீ., புதுக்கோட்டையில், 39.6 கி.மீ., ராமநாதபுரத்தில், 138.6 கி.மீ., துாத்துக்குடியில், 44 கி.மீ., என, 331 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்த, 11 கோடியே, 22 லட்சத்து, 41,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி ஆகிய இடங்களில் நிலம் கையகப்படுத்த, 4 கோடியே, 92 லட்சத்து, 15,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக, 2024ல் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனி தாசில்தார், துணை தாசில்தார், கண்காணிப்பாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் என, 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் நடந்தன.


இந்நிலையில், பசுமை கடற்கரை சாலை அமைக்கும் திட்டத்தில் ஈர நிலங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதுவரை நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வருவாய்த்துறை பணியாளர்கள் மீண்டும் அவர்களின் துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.மாற்று வழிகளை தேர்வு செய்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின், விரைவில் மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement