வாசகர்களை மாண்போடு அணுகும் நாளிதழ்!
அரசு, அதிகாரம், நீதிப் பரிபாலனம் என்ற முக்காலிகளின் மேல் வீற்றிருக்கும் ஜனநாயக அரியணை பலமாக இருக்கிறதா என சோதிக்கும் காவல் அரணே ஊடகம்.
எட்டு தசாப்தங்களுக்கு முன்பு, அப்போதிருந்த குறைவான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு, இந்த அரண் காக்கும் பணியைத் தொடங்கியது தினமலர்.
இன்று தொழில்நுட்பத்தின் உச்சத்தில், அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கி தன்னுடைய கண்காணிப்புப் பணியை செவ்வனே நிறைவேற்றி நடைபோடுவதைப் பார்க்கும் போது, ஓர் எளிய வாசகனாக 'தினமலர்' நாளிதழ் நூற்றாண்டு கடந்து கோலோச்ச வேண்டுமென உள்ளம் குளிர வாழ்த்துகிறேன்.
ஊடகம் என்பதும் ஒரு தொழிலாக மாறி விட்ட இந்தக் காலத்தில், நாளிதழ்களை வாங்குபவர்களை 'பயனர்' என வர்த்தக நோக்கில் சுருக்காமல், அவர்களை 'வாசகர்கள் , பார்வையாளர்கள், கேட்பவர்கள்# என மாண்போடு அணுகும் போக்கிற்கு உதாரணம் தினமலர் நாளிதழில் வெளிவரும் வெவ்வேறு பகுதிகளே சான்று!
குடும்பத்தின் அனைத்து தரப்பு உறுப்பினர்களுக்கும் தேவையான செய்திகளை, கட்டுரைகளை, ஆய்வுகளை வெளியிட்டு வரும் தினமலர் வெறுமனே செய்திகளை மக்களுக்குச் சேர்க்கும் நிறுவனம் மட்டுமல்ல, கருத்துருவாக்கக் கருவியாகவும் செயல்பட்டு வருகிறது.
அரசைப் பாராட்ட வேண்டிய தருணங்களில் கைதட்டிப் பாராட்டுவதும், கை குலுக்கி மக்களின் குரலை அரசின் காதுகளுக்கு எட்டச் செய்வதும் என இருவழிப் பாதையில் பயணிப்பதே ஊடகத்தின் ஆகச் சிறந்த அறமாக இருக்க முடியும்.
இந்த அறவழிப் பாதையில் தொடர்ந்து வீறுநடைபோடும் தினமலர் பணி தொய்வின்றித் தொடர வாழ்த்துகள்!
அன்புடன்
ராஜ்மோகன்,
பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்