வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி விரிவாக்கம்   கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்

கடலுார்: வெளிநாடுகளுக்கு தபால் அலுவலகங்கள் மூலம் பார்சல் அனுப்பும் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என, கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி கூறியுள்ளார். 

அவரது செய்திக்குறிப்பு: 

கடலுார் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களிலும் வெளிநாட்டு பார்சல் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம் தலைமை தபால் நிலையங்கள் மற்றும் பண்ருட்டி துணை அஞ்சல் அலுவகங்களிலும் கூடுதலாக சிறந்த முறையில், ‘பேக்கிங்’ வசதியுடன் புக்கிங் செய்யப்படும். 

இந்திய தபால் துறையின் சர்வதேச சேவை மூலம், உலகின் பல்வேறு நாடுகளுக்கு தனியார் நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் தபால்களை அனுப்ப முடியும். மேலும், அனுப்பப்படும் தபால்களின் நிலையை இணைய வழியில் கண்காணிக்கும் வசதியும் உள்ளது. 

புதிய சிறப்பு சேவையான ‘இன்டர்நேஷனல் டிராக்கிங் பாக்கெட் சேவை’ மூலம், 5 கிலோ வரை குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்பலாம். கடலுார் கோட்டத்தில் வெளிநாடுகளுக்கு ஆவணங்கள் அல்லது பொருள்களை அனுப்ப விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையம், துணை தபால் நிலையத்தை அணுகி சேவைகளை பெறலாம்.

வணிக ஆவணங்கள், சிறுதொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் மூலமாக அனுப்பலாம்.

 மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் அலுவலர்கள் கிருஷ்ணகுமார் (9952542179), பாலசச்சிதானந்தம் (9073909093)  ஆகியோரை அந்தந்த மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement