ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், கைத்தறி, துணி நுால் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி, நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: ஈரோடு சம்பத் நகரில் புதிதாக அரசுப்பள்ளி கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு காலியாக உள்ள இடம் மற்றும் பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு கட்டப்பட உள்ளது. இடையன்காட்டு வலசு மற்றும் வீரப்பன்சத்திரம் பகுதி மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர். மைதானம் இல்லாத கல்வி முழுமை அடையாது.
எனவே மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதான வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement