குழந்தை வயிற்றுக்கு வெளியே இருந்த சிறுநீர்ப்பை அகற்றம் அரசு டாக்டர்கள் சாதனை

சிதம்பரம்:   கடலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பிறந்த குழந்தையின், வயிற்றுக்கு வெளியே இருந்த சிறுநீர்ப்பை டாக்டர்களால் அகற்றப்பட்டது.

 கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த தம்பதிக்கு சில தினங்களுக்கு முன்பு, ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, குழந்தையின் சிறுநீர்ப்பை பிளந்து வயிற்றுக்கு வெளியே இருந்தது.

இந்நிலையில், மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்,  குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அப்போது டாக்டர்கள், ‘இது 50 ஆயிரம் குழந்தைகளில், ஒருவருக்கு ஏற்படும், பிறவிக் குறைபாடாகும். இதை சரி செய்யாவிட்டால் சிறுநீர் எப்போதும் ஒழுகியவாறே இருக்கும். இதனால் எதிர்காலத்தில் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்படும்’, என குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, குழந்தைக்கு, அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய முடிவெடுத்தனர். பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில், பச்சிளங் குழந்தைக்கு ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து குழந்தை உடல் நலம் தேறியதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பியுள்ளார். மேலும்  4 ஆண்டுகளுக்கு பின், சிறுநீர் அடக்கும் திறனை மேம்படுத்த மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என டாக்டர்கள்  அறிவுரை வழங்கி குழந்தையின் பெற்றோரை அனுப்பி வைத்தனர்.

 இந்த அறுவை சிகிச்சையை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 சிகிச்சையை வெற்றிகரமாக செய்த அறுவை சிகிச்சை டாக்டர்கள், மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர் அடங்கிய குழுவை கல்லுாரியின் முதல்வர் பாஸ்கர், கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் ஆகியோர் பாராட்டினர்.

 

Advertisement