பள்ளிகளில் குறுவட்ட விளையாட்டு: தகவல் தெரியாமல் தவித்த மாணவர்கள்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி குறித்த தகவல் தெரியாததால் பெரும்பாலான நடுநிலைப்பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதிகளில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி குறித்து பல அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகள் குறித்த அறிவிப்பு அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கும் வழங்கப்படுவதில்லை என்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்படுவதாக கருத்து நிலவுகிறது.

எனவே கல்வி துறை நிர்வாகம் விளையாட்டு போட்டிகள் குறித்து அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முழு தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement