பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:

காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது. காவிரியில் தண்ணீர் வராததால், டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறியிருக்கின்றன; 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. டெல்டாவில் கருகும் பயிர்களை பார்க்க, கர்நாடக முதல்வர் சிவகுமாரை அழைத்து வந்து, தண்ணீர் தர அழுத்தம் கொடுப்பாரா முதல்வர் விஜய்?

உங்க ஆட்சியிலும் தண்ணீர் தராமல் கர்நாடகா அடம் பிடிச்சிருக்கே... அப்ப எல்லாம், கர்நாடக முதல்வரை நீங்க அழைச்சிட்டு வந்தீங்களா?


தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பேச்சு:

'வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும்' என்ற சட்டத்தை கொண்டு வருவதன் வாயிலாக, தேச உணர்வை மக்களிடம் திணிக்க முடியாது. மாநில பாடலை வைத்துள்ள தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் வந்தே மாதரம் கட்டாயம் என்ற மசோதா, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

தேசம் ஒற்றுமையாக இருந்தால் தானே, அதற்குள் இருக்கும் மாநிலம் நிம்மதியாக இருக்க முடியும்... வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தேசபக்திக்கு எதிரானது இல்லையா?


பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தலைமையில் இயங்கும், 'விராட் ஹிந்துஸ்தான்' சங்கத்தின் நிர்வாகி, நெல்லை கோமான் அறிக்கை:

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி, அந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்கள் நலன் கருதி, தமிழகம் முழுதும் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் தான். இவர்களுக்கு பதிலாக, இது போல மக்களை நேரடியாக சந்தித்து மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு, தனி குழு அமைச்சா நல்லா இருக்கும்!

மாணவர் காங்., தமிழக தலைவர் சின்னதம்பி அறிக்கை:

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒரு பாடல் மட்டுமல்ல; தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தின் மரியாதைக்குரிய வெளிப்பாடாகும். அதற்கு உரிய இடம் வழங்கப்படாமல் இருப்பது, தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயல். தமிழகத்தின் மொழி மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நடந்தது போன்ற நிகழ்வுகள், மீண்டும் நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வச்சி, அவங்களை மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டீங்களே!

Advertisement