தொகுதி மறுவரையறை மசோதா: பார்லி.,யில் அடுத்த வாரம் தாக்கல்

7



- நமது சிறப்பு நிருபர் -




பார்லி.,யில் அடுத்த வாரம், தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 20ல் தொடங்கியது. வரும் 13 வரை நடக்கவுள்ள நிலையில், முதலிரண்டு வாரங்கள் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியில் சரிவர அலுவல்கள் நடக்கவில்லை. டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீதான தடியடி விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளும் அடுத்தடுத்து முடங்கின.

எனினும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே, தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா - 2026, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா - 2026 ஆகியவற்றை, பார்லி.,யில் கடந்த வாரம் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த வாரத்தில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா - 2026ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சாரா அமைப்புகளை ஒடுக்கவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதே போல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையரை மசோதாவையும் வரும் நாட்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கு மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை என்பதால், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement