ஜூலை மாதத்தில் போக்குவரத்து விதிமீறிய 14, 748 பேர் மீது போலீசார் நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூலை மாதத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 14, 748 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சீனியர் எஸ்.பி., திவ்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சாலை பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் போன்ற முக்கிய போக்குவரத்து விதிமீறல்களுக்கு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் புதுச்சேரி முழுதும் முக்கிய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்தம் 14, 748 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுதல்– 6,154, வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துதல்– 3,096, சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல்– 236, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்– 344, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்– 129, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்–1,143, தவறான  வழியில் வாகனம் ஓட்டுதல்– 2,086, சிக்னலை மீறி வாகனம் ஓட்டுதல்– 1,484, ஏர் ஹார்ன் பயன்படுத்துதல்– 38, மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பயன்படுத்துதல்–4, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்லுதல்–34 என 14,748 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், சிறுவர்கள் வாகனம் ஓட்டிய வழக்குகளில், பெற்றோர்கள் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டு, சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பதால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்து அறிவுறுத்தியத்துடன், இனி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துகளை குறைப்பது, போக்குவரத்தை ஒழுங்கை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த சிறப்பு அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளார்.

Advertisement