பும்ரா விலகியது ஏன்: இலங்கை டெஸ்ட் தொடரில் பாதிப்பு

பெங்களூரு: முழங்கால் காயத்தில் இருந்து குணமடையாத பும்ரா, இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.


இலங்கை செல்லும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் (காலே, ஆக. 15-19, கொழும்பு, ஆக. 23-27) பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 'வேகப்புயல்' பும்ரா, சாய் சுதர்சன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டுமென பி.சி.சி.ஐ., அறிவுறுத்தியிருந்தது. இருவரும் பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., உயர்திறன் மையத்தில் பயிற்சி மேற்கொண்டனர். உடற்தகுதியில் பும்ரா தேறிவிட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டது. ஆனால், இவரது முழங்கால் பகுதியில் இன்னும் வீக்கம் குறையாததால், 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம் என பெங்களூரு மையத்தின் விளையாட்டு அறிவியல் குழுவினர் அறிவுறுத்தினர்.

அகிப் நபி வாய்ப்பு: இதையடுத்து இலங்கை தொடரில் இருந்து பும்ரா விலகினார். இவருக்கு பதிலாக காஷ்மீர் வீரர் அகிப் நபி சேர்க்கப்பட உள்ளார். கடந்த இரு சீசனில் ரஞ்சி டிராபியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர். விதர்பாவின் யாஷ் தாகூரும் வாய்ப்பை எதிர்பார்க்கிறார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார் உள்ளிட்ட 'வேகங்களும்' அணியில் உள்ளனர்.
தொடை பகுதி பிடிப்பு காயம் காரணமாக நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் அவதிப்படுவதால், இலங்கை தொடரில் இடம் பெற இயலவில்லை. தற்போது, டெஸ்ட் அரங்கின் 'நம்பர்-1' பவுலரான பும்ராவும் விலகியது, இந்திய அணிக்கு பின்னடைவு.


இது பற்றி பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''பும்ராவை அவசரமாக களமிறக்க கூடாது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையட்டும். அவருக்கு ஆசிய விளையாட்டு, நியூசிலாந்து தொடர், பார்டர்-கவாஸ்கர் தொடர் என நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக வீரர் சாய் சுதர்சன், கால் விரல் பகுதி காயத்தில் இருந்து தேறிவிட்டார். வலை பயிற்சியில், 75 நிமிடங்கள் பேட்டிங் செய்தார். உடற்தகுதி பெற்று இலங்கை தொடரில் விளையாடுவாரா என்பது அடுத்த சில நாளில் தெரிய வரும்,''என்றார்.

Advertisement