மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மோசடி: துணை கலெக்டர் கைது

7

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பூஜைக்கான அறக்கட்டளையின், 60 கோடி ரூபாய் இடத்தை அபகரித்த வழக்கில்,ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (துணை கலெக்டர்) அன்பழகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


மதுரை மீனாட்சி கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்ய புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜா - துரைராணி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம், பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்ததாக முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் விஏஓ அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ், அனந்தராமன், தங்கள் பெயருக்கு பட்டா மாற்றிய ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி உட்பட, 19 பேர் மீது, கோவில் இணைகமிஷனர் செல்லத்துரை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும் நிலையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து பட்டா பெற்றததாக புதுக்கோட்டை கறம்பக்குடி ராஜ்குமாரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு 'மூளையாக' செயல்பட்ட இளையராஜாவை நேற்று, பெங்களூருவில் தனிப்படையினர் கைது செய்தனர்.


இந்நிலையில், இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் துணை கலெக்டர் அன்பழகனை போலீசார் இன்று [ஆகஸ்ட் 04 ] கைது செய்தனர். இவர் தற்போது ராமநாதபுரம் கலெக்டரின் சிறப்பு நேர்முக உதவியாளராக (நிலம்) பணியாற்றி வருகிறார். மோசடி நடந்தபோது, அன்பழகன் மதுரையில் தாசில்தாராக பணியாற்றியுள்ளார்.

Advertisement