காரை எரித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருச்சி: தகராறு செய்ததை தட்டிக்கேட்டவரின் காரை, கஞ்சா போதையில் எரித்த பெஸ்கின், 19, உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், கிராப்பட்டியைச் சேர்ந்தவர் அஜீஸ், 35. நேற்று முன்தினம் மாலை, கிராப்பட்டி கடைவீதியில், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது வாலிபர் மற்றும் சிக்கன் கடை ஊழியர்கள் பெஸ்கின், 19, யாசர் அராபத், 24, ஆகிய மூவரும் சேர்ந்து, போதையில் தகராறில் ஈடுபட்டனர்.

அஜீஸ் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மூவரும், பாசித் என்பவருடன் சேர்ந்து, அஜீசை பழிவாங்க திட்டமிட்டனர்.

அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, அஜீஸ் தன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த ஸ்விப்ட் காருக்கு, தீ வைத்து கொளுத்தினர். இதில், பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.டி., ஊழியர் பிரதீப் என்பவரின் காரும் தீயில் எரிந்தது. அப்பகுதியினர், நான்கு பேரையும் சுற்றி வளைத்து, தர்ம அடி கொடுத்ததில், அவர்கள் காயமடைந்தனர். இதில், பாசித் தப்பி விட, மற்ற மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement