வாகன உதிரிபாக துறை பங்குகள் ஒரே நாளில் 7 சதவிகிதம் வரை உயர்வு

பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் இடையே வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களின் பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டின.

உள்நாட்டு வாகன உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும், வாகன உதிரிபாக சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதே இத்துறை சார்ந்த பங்குகள் நேற்று வலுவாக ஏற்றம் காண காரணமாக கூறப்படுகிறது.

இத்துறை சார்ந்த சில முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 7 சதவீதம் வரை உயர்ந்தன. குறிப்பாக, 'கேப்ரியல் இந்தியா' நிறுவன பங்கு 1,584.20 என்ற புதிய உச்சத்தை எட்டியது. கடந்த ஒரு மாதத்தில் 29 சதவீதமும், இரண்டு மாதங்களில் 56 சதவீதமும், மார்ச் மாதத்தில் பதிவான 52 வாரக் குறைந்தபட்ச விலையிலிருந்து கிட்டத்தட்ட 99 சதவீதமும் இந்த பங்கு உயர்ந்துள்ளது.

வாகனங்களில் அதிக தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்படுவது, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பது, உதிரிபாகங்களுக்கான தேவை உயர்வது மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகள் ஆகியவை இந்த துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய ஆட்டோ உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஏ.சி.எம்.ஏ.,) கணிப்பின்படி, நடப்பு நிதியாண்டில் இத்துறை 8 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் உலகளாவிய வர்த்தக, வினியோக தொடரில் உள்ள சிக்கல்கள் ஆகியவை குறுகிய காலத்தில் நிறுவனங்களின் லாப விகிதத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சவால்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி துறை 8 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய ஆட்டோ உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் கணித்துள்ளது.

Advertisement