தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக திமுக.,வை ஓட்டளிக்க வைக்க காங்., முயற்சி!

1

சென்னை: பார்லிமென்டில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக, தி.மு.க.,வை ஓட்டளிக்க வைக்க, காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

பார்லிமென்டில் கடந்த ஏப்ரலில் தோல்வியடைந்த லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை, நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்ய, மத்திய பா.ஜ., அரசு திட்டமிட்டு வருகிறது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் பலர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக மாறியுள்ளனர். இதனால், லோக்சபாவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 318 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 42 எம்.பி.,க்களின் ஆதரவு கிடைத்தால், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற முடியும்.

இந்நிலையில், 22 எம்.பி.,க்களை கொண்ட தி.மு.க.,வின் ஆதரவை பெற, பா.ஜ., முயற்சித்து வருகிறது. 'அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கப்படும்' என மசோதாவில் இருந்தால், தி.மு.க., ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

நேரடியாக மசோதாவை ஆதரித்து தி.மு.க., ஓட்டளிக்காவிட்டாலும், ஓட்டெடுப்பை புறக்கணித்தால் கூட, அது பா.ஜ.,வுக்கு சாதகமாகி விடும். எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக, தி.மு.க.,வை ஓட்டளிக்க வைக்கும் முயற்சியில் காங்., மேலிடம் இறங்கியுள்ளது.

இதற்காக, தி.மு.க., துணை பொதுச்செயலரும் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவருமான கனிமொழியிடம், அகில இந்திய காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் பேச்சு நடத்தி உள்ளார்.

அதற்கு, 'சென்னை வந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தி.மு.க.,வை 'எட்டப்பன்' என மறைமுகமாக விமர்சித்தார். தி.மு.க.,வை எதிரியாக ராகுல் கருதும் நிலையில், காங்., உடன் நாங்கள் எப்படி இருப்பது?' என, கனிமொழி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதற்கு ஜெய்ராம் ரமேஷ், 'தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்காவிட்டால், தி.மு.க., ஓட்டு வங்கியில் சேதாரம் ஏற்படும். எனவே, தமிழகத்தில் எதிராக அரசியல் செய்தாலும், டில்லியில் பா.ஜ.,வை எதிர்ப்பதில், தி.மு.க., பின்வாங்கக்கூடாது' என, கனிமொழியிடம் கூறியதாக தெரிகிறது.

Advertisement