விவசாயிகளை வெளியேற்ற எதிர்ப்பு: பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கடமலைக்குண்டு, ஆக.5 -

வருஷநாடு அருகே மலைப்பகுதி விவசாயிகளை வன ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடும்பாறையில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர். ஸ்ரீவி., -மேகமலை புலிகள் காப்பகம் இப் பகுதி விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டித்து மயிலாடும்பாறையில் பா.ஜ.,மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட விவசாய அணி துணை தலைவர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மலைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 2006ம் ஆண்டு வன உரிமை சட்டத்தின்படி குடியிருப்பவர்கள் அனைவருக்கும் நில பட்டா வழங்கவும், பொது மக்களை கிராமங்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement