போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்

11

தஞ்சாவூர்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியிடம் போலீஸ் விசாரணையின்போது ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, 'டபுள் மீனிங்கில் எதுவும் பேசவில்லை' என, உதயநிதி பதிலளித்துள்ளார்.

தி.மு.க., சார்பில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, த.வெ.க., மகளிரணி சார்பில், தஞ்சாவூர் கிழக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில், உதயநிதி மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் உதயநிதி கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டார்.

தஞ்சாவூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, விசாரிக்க திட்டமிட்ட நிலையில், தி.மு.க.,வினர் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டதால், செங்கிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உதயநிதி அழைத்து செல்லப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், 'இரட்டை அர்த்தத்தில் பேசியது, கூட்ட நிபந்தனை, தனி நபர் மீதான தாக்குதல் பேச்சு' உட்பட ஐந்து முக்கிய கேள்விகள், உதயநிதியிடம் கேட்கப்பட்டன.

அதற்கு, 'தனிநபர் குறித்து நான் எதுவும் பேசவில்லை; இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை' என உதயநிதி பதிலளித்துள்ளார்.

எல்லா கேள்விகளுக்கும், ஒரு சில வார்த்தைகளிலேயே உதயநிதி பதில் அளித்தார். போலீஸ் ஸ்டேஷனில், ஒன்றரை மணி நேரம் உதயநிதி இருந்தாலும், அரை மணி நேரத்தில் விசாரணை முடிந்தது.

விசாரணை குறித்து, போலீசார் கூறுகையில், “உதயநிதி மீதான, இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீதான வழக்கு, தஞ்சாவூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். உதயநிதியிடம், விசாரணையின்போது, ஐந்து கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்கு, உரிய பதில்களை அவர் கூறினார்,” என்றனர்.

Advertisement