20 ஆண்டு ஐஏஎஸ் பணியில் 25 முறை டிரான்ஸ்பர்; மும்பையை கலக்கும் துக்காராம் முண்டே!

14

-நமது நிருபர்-



நேர்மையாகவும், வாங்கும் அரசு சம்பளத்துக்கு உண்மையாகவும், நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகளை காண்பது இப்போது மிகவும் அபூர்வமாகி விட்டது.அத்தகைய அபூர்வ அதிகாரிகளில் ஒருவர்தான், துக்காராம் முண்டே.


மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த, 2005ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி.சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 20ம் ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றவர்.பணியில் சேர்ந்த காலம் முதலே, உண்மை, நேர்மை என்று இருப்பவர்; செயல்படுபவர். அவருக்கும், அரசுகளுக்கும் எப்போதும் அக்கப்போர் தான்.


விளைவு, தன் 20 ஆண்டு பணிக்காலத்தில் இதுவரை 25 முறை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார் முண்டே. எந்த பதவியில் போட்டாலும், குடைச்சலாக இருக்கிறார் என்று கருதி, மஹாராஷ்டிர மாநில அரசு அவரை, உணவுப் பாதுகாப்பு ஆணையர் என்ற பதவியில் அமர்த்தியது.


அதுவரை தூங்கி வழிந்து கொண்டிருந்த உணவு பாதுகாப்பு ஆணையத்தின் செய்தி அறிக்கைகள் வரக்கூடிய வாட்ஸ்ஆப் குழுவானது, அன்று முதல் விழித்துக் கொண்டது.
தினமும் காலை முதல் இரவு வரை, ரெய்டு...ரெய்டு... ரெய்டு...துறையின் அத்தனை அலுவலர்களையும் களத்தில் இறக்கி விட்ட முண்டே.தானும் களம் இறங்கினார்.


பெரிய நிறுவனம், சின்ன நிறுவனம், பழம் பெருமை வாய்ந்த நிறுவனம், விஐபிக்கு சொந்தமானது என்று எந்த நிறுவனமும் அவரது ரெய்டில் தப்பவில்லை.
விதிமுறைப்படி செயல்படாத நிறுவனங்கள், சுத்தம் சுகாதாரத்தை பராமரிக்காத நிறுவனங்கள், லைசன்ஸ் புதுப்பிக்கப்படாதவை, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்த ஆலைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.


தினம்தோறும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் முண்டே ரெய்டு நடத்திய செய்திகள் தொடர்ந்து வெளியாக தொடங்கின. சக்தி வாய்ந்த நபர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கை வைத்ததால் இவருக்கு தினமும் ஏராளமான மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 'அதையெல்லாம் பார்த்தால் முடியுமா' என்று கூறியபடி, ரெய்டு நடவடிக்கையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் முண்டே.


தனியார் நிறுவனங்களை குறிவைத்து அவர் ரெய்டு நடத்துவதாக, மும்பை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏன் தனியார் நிறுவனங்களில் மட்டும் ரெய்டு நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.


மறுநாளே மும்பை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் உணவகங்களில் ரெய்டு நடத்தினார் முண்டே. அந்த உணவகங்கள் லைசன்ஸ் இல்லாமல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. லைசன்ஸ் வாங்கிய பிறகு நடத்துங்கள் என்று மூட உத்தரவிட்டார் முண்டே.


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1300 உணவகங்கள், நிறுவனங்களில் ரெய்டு நடத்தியுள்ளார். 49 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல், 1.6 லட்சம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழித்துள்ளார்.


மும்பை மக்களும், நடப்பதை அருகில் இருந்து பார்க்கும் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களும், 'இவர்தான் உண்மையான சிங்கம்' என்று புகழ, தன் பாணியில் ரெய்டு நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார் முண்டே.

Advertisement