கடனை வசூலிப்பதற்காக செல்போனை முடக்க தடை - ஆர்.பி.ஐ., உத்தரவு

தனிநபர், வாகனம், வீட்டு கடன் திரும்ப செலுத்தாதவர்களின் மொபைல், டேப்லெட், லேப்டாப்களை முடக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ தடை விதித்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட அந்த போன் அல்லது லேப்டாப் வாங்குவதற்காகவே அதே வங்கி கடன் வழங்கியிருந்தால் மட்டும் கட்டுப்பாடுகளுடன் அவற்றை முடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வசூல் முகவர்களின் கெடுபிடிகள் மற்றும் புகார்களை தொடர்ந்து உருவாக்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடன் வசூல் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் தன்னிச்சையான போக்கிற்கு ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவு முற்றுப்புள்ளி வைக்கும் என வங்கித் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முக்கிய நிபந்தனைகள்

*மொபைல் போன் அல்லது லேப்டாப் வாங்குவதற்காக கடன் வாங்கி தவணை செலுத்த தவறினால் மட்டுமே வங்கிகள் அதை முடக்கலாம்

* கடன் நிலுவை ஏற்பட்ட உடனடியாக முடக்காமல் படிப்படியான கட்டுப்பாடுகளையே பின்பற்ற வேண்டும்

* சாதனம் முடக்கப்பட்டாலும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., அவசர கால சேவை போன்ற அத்தியாவசிய சேவைகளை முடக்க கூடாது

*நிறுவனம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பிடம் உரிய பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும்

* கடன் வசூல் ஊழியர்களுக்கு தேவையான அளவிலான வாடிக்கையாளர் விபரங்களை மட்டுமே வழங்க வேண்டும்.

Advertisement