பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வால்...விரக்தி! :மன உளைச்சலில் உற்பத்தியாளர்கள்

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் போலீசார், அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருவதால் உற்பத்தியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் விருதுநகர்,சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஜூலை 26 ல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதுமே பட்டாசு பதுக்கியவர்கள், சட்டவிரோதமாக தயாரிப்பவர்கள் மீது போலீசார், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதே சமயத்தில் உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளிலும் தொடர் ஆய்வு நடத்துவதால் உற்பத்தியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். உதாரணமாக ஒரு குழுவினர் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து சென்ற பின்னர் மறுநாளே போலீசாரும் அங்கு ஆய்வு செய்து ஏதேனும் வழக்கு பதிவு செய்கின்றனர். தவிர பட்டாசு பதுக்குபவர்கள், சட்ட விரோதமாக தயாரிப்பவர்கள் மீது புகார் அளிக்க டோல் ப்ரீ நம்பர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நம்பருக்கு உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகள் குறித்தே அதிகமாக புகார்கள் செல்கின்றது. இங்கு ஆய்வு செய்பவர்கள் விதிமீறல் இல்லையென்றாலும் வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் பொய்யாக புகார் அளித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

Advertisement