மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்... சரிவு: கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்

தியாகதுருகம்: தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பயிர்களைக் காப்பாற்ற கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியது. இதனால் நீர் நிலைகள் நிரம்ப வழி இன்றி பெரும்பாலா ன ஏரி, குளங்கள் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வறண்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கிய நிலையில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் கிணற்று நீர் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆண்டு பயிரான கரும்பு, மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வரு கின்றனர். அதேபோல் சம்பா பருவ நெல் சாகுபடி செய்வதற்கு பெரும்பாலான விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் நெல் சாகுபடி பரப்பும் குறைந்து தானிய உற்பத்தி சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் பெய்யும் மழை வெறும் துாறலோடு நின்று விடுவதால் தண்ணீர் வரத்து கிடைக்காமல் நீர் நிலைகள் வறண்டு கிடக்கிறது.

கோமதி மற்றும் மணிமுத்தா ஆகிய இரு அணைகளும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது நீர்மட்டம் குறைவாக உள்ளதால் அணையின் நீர் பிடிப்பு பகுதி புல்வெளி பரப்பு போல் காணப்படு கிறது. இதனால் பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் உயரவழியின்றி உள்ளது. கரும்பு பயிரைக் காப்பாற்ற தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதால் வேறு வழியின்றி கிணற்றை ஆழப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி உள்ளதால் கடன் வாங்கி கிணறு வெட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 'எல் நினோ' தாக்கத்தால் இந்த ஆண்டு மழை அளவு குறையும் என்ற கவலையும் விவசாயிகளுக்கு ஏற்பட்டு ள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்து மேலும் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். பருவ மழை ஏமாற்றுவதால் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement