இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு டிராக் பதக்கம் அறிவிப்பு

6


புதுடில்லி: ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகின் மிகச்சிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர்களுக்கு வழங்கப்பட்ட டிராக் பதக்கம், இந்தாண்டு இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்பாட்டு இயற்பியல் சர்வதேச மையத்தால் வழங்கப்பட்டு வரும் இந்த மதிப்புமிக்க விருது, இயற்பியல் துறையில் வழங்கப்படும் உலகளாவிய மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 1985ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட உலகின் மிகச்சிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர்களுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2026ம் ஆண்டுக்கான டிராக் பதக்கம், இந்திய இயற்பியலாளரும், ஐஐஎன்எஸ்ஏ சிறப்பு பேராசிரியருமான தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபர எந்திரவியல் துறையில் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இயற்பியலாளர்களில் தீபக் தாரும் ஒருவர் ஆவார்.

யார் இந்த தீபக் தார்?





'உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் 1951ல் பிறந்த இவர், ஹிந்தி வழிக் கல்வியில் பயின்றவர். சிறு வயது முதலே அறிவியல் மீது கொண்ட ஆர்வத்தால், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கான்பூரில் மேல்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கால்டெக் நிறுவனத்தில் ரிச்சர்ட் பெய்ன்மேன் உதவித்தொகையைப் பெற்று, புகழ்பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் பெய்ன்மேனுடன் நேரடியாகப் பணியாற்றி 1978ல் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவிலேயே குடியேறும் வாய்ப்பு இருந்தபோதிலும், இந்தியா திரும்பிய தீபக் தார், மும்பையில் உள்ள டி.ஐ.எப்.ஆர். நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் ஐசர் புனேவில் சுமார் 8 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்தார்.

புள்ளிவிவர இயற்பியலின் மிக உயரிய விருதான போல்ட்ஸ்மேன் பதக்கம், பத்ம பூஷண், டிராக் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

Advertisement