எப்.சி.ஆர்.ஏ., சட்ட திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகள்!

4


வாஷிங்டன்: ''எப்.சி.ஆர்.ஏ.,சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசின் திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகளை உறுதி செய்கிறது'' என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பப்படும் பணத்தை, இந்தியத் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் எவ்வாறு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதை எப்.சி.ஆர்.ஏ., சட்டம் நிர்வகிக்கிறது. இந்த சட்டத்தை கடுமையாக்கும் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதை தடுக்கும் நோக்கத்துடன் தான், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லியை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றன.

இந்நிலையில், எப்.சி.ஆர்.ஏ.,சட்டத்தை கடுமையாக்கும் திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை உள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டு நிதிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவது என்பது தேசியப் பாதுகாப்பு நலன் சார்ந்த மிக முக்கியமான நடவடிக்கையாகும். இது உலகம் முழுவதும் உள்ள பல ஜனநாயக நாடுகளில் நவீன நிர்வாகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

இந்தியாவில் முதல் எப்.சி.ஆர்.ஏ., சட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. 2010ல் அது மிகவும் நவீனமான கட்டமைப்பைக் கொண்ட சட்டமாக மாற்றப்பட்டது; பின்னர் 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் அது மேலும் வலுப்படுத்தப்பட்டது.

அடுத்தகட்ட நடவடிக்கை

2026ம் ஆண்டிற்கான திருத்த மசோதா கொண்டு வரப்பட இருப்பது அடுத்தகட்ட நடவடிக்கையாகும். அதாவது அதிக வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் தெளிவான விதிகளை இது உறுதி செய்கிறது. உண்மையில், இச்சட்டம் இந்தியர்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதைத் தடை செய்யவோ அல்லது சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் சிவில் சமூக அமைப்புகளை முடக்கவோ செய்யாது. பல்லாயிரக்கணக்கான அமைப்புகள் சுகாதாரம், கல்வி, பேரிடர் நிவாரணம், ஆராய்ச்சி மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காகத் தொடர்ந்து வெளிநாட்டு நிதியைப் பெற்று வருகின்றன.


குறையவில்லை




இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு நிதியின் அளவு குறையவில்லை, மாறாக அதிகரித்து வருகிறது. பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கான வெளிநாட்டு நிதி பங்களிப்பு 2010-11ல் 1.2 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2024-25ல் 2.67 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) உள்ளன. 14,450 நிறுவனங்கள் மட்டுமே எப்.சி.ஆர்.ஏ., பதிவைக் கொண்டுள்ளன. பெரும்பான்மையானவை இச்சட்டத்தின் வரம்பிற்குள் வருவதில்லை.


தடுப்பதில்லை




வெளிநாட்டுத் தொண்டு நிதிகள், ஆராய்ச்சி மானியங்கள் அல்லது மனிதாபிமான உதவிகளைப் பெறுவதிலிருந்து எப்.சி.ஆர்.ஏ.,சட்டம் யாரையும் தடுப்பதில்லை. இந்தியா உண்மையான சர்வதேச கூட்டாளிகளை வரவேற்கிறது. பதிவு ரத்து செய்யப்படும்போதோ அல்லது திரும்ப ஒப்படைக்கப்படும்போதோ, வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகள் ஏற்கனவே மாநில அரசு அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றன. இது 2010ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் உள்ளது; இது ஒன்றும் புதியதல்ல.


ஒப்படைக்கப்படும்




2026ம் ஆண்டு மசோதா புதிதாகச் சேர்ப்பது என்னவென்றால், அந்தச் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிட்ட அதிகார அமைப்பையும், அத்துடன் அவற்றை மீண்டும் பெறுவதற்கான ஒரு வாய்ப்பும் தான். ஒரு அமைப்பு தனது பதிவை மீண்டும் பெற்றுக்கொண்டால், அனைத்துச் சொத்துகளும் பயன்படுத்தப்படாத நிதியும் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும்.

பதிவு ரத்து செய்யப்பட்ட ஒரு அமைப்பு வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடைய சொத்தை உருவாக்கியிருந்தால், வழிபாட்டு நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய, அந்தச் சொத்து அதே மதத்தைச் சேர்ந்த, FCRA பதிவு பெற்ற மற்றொரு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும்.


தகுதி உண்டு



மதம், சமூகம் அல்லது சித்தாந்தம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து அமைப்புகளுக்கும் இச்சட்டம் சமமானது. மதக் கல்வி, வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்தல் மற்றும் பல்வேறு மதங்களைச் சார்ந்த அமைப்புகள் மேற்கொள்ளும் அறப்பணிகள் உள்ளிட்ட மதச் சார்புடைய நலத்திட்டப் பணிகளுக்குத் தொடர்ந்து வெளிநாட்டு நிதியுதவி பெறத் தகுதி உண்டு. இவ்வாறு வினய் மோகன் குவாத்ரா கூறியுள்ளார்.

Advertisement