'கோபர்தன்' திட்டத்தால் எரிவாயு இறக்குமதி செலவு குறையும்: இந்திய பயோகாஸ் சங்கம் தகவல்

புதுடில்லி: 'கோபர்தன்' திட்டம், நாட்டின் எரிவாயு மற்றும் உர இறக்குமதி செலவை கணிசமாக குறைக்க உதவும் என, இந்திய பயோகாஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கம் தெரிவித்துள்ளதாவது:

'கோபர்தன்' திட்டத்துக்கு 23,731 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, இதை வெறும் செலவினமாக கருதாமல், எரிசக்தி பாதுகாப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் நீண்டகால முதலீடாக பார்க்க வேண்டும்.

இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில், ஏறத்தாழ 50 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செலவு கிட்டத்தட்ட 1.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

வரும் ஆண்டுகளில், உயிரி கழிவுகளை பயன்படுத்தி, சி.பி.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் 1,500 ஆலைகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், இயற்கை எரிவாயு இறக்குமதி செலவை, ஏறத்தாழ 47,605 கோடி ரூபாய் வரை குறைக்க முடியும்.

இந்த ஆலைகளில் கிடைக்கும் இயற்கை உரம் மற்றும் திரவ உயிர் உரம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க உதவும். இதன் வாயிலாக, உர இறக்குமதியை குறைந்தபட்சம் 5 சதவீதம் குறைத்து, ஏறத்தாழ 9,521 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும்.

மேலும், கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாய கழிவுகளை வருமானம் தரும் வளமாக மாற்றுதல் மற்றும் பயிர்க்கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பதால் ஏற்படும் காற்று மாசை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்களையும் இந்த திட்டம் வழங்கும்.

இவ்வாறு இச்சங்கம் தெரிவித்துள்ளது.

@block_B@

'கோபர்தன்' திட்டம்

விவசாய மற்றும் நகர்ப்புற கழிவுகளை பயன்படுத்தி, பயோகாஸ் உற்பத்தியை அதிகரிக்க, 23,731 கோடி ரூபாய் மதிப்பிலான 'கோபர்தன்' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, 2027 - 36 காலகட்டத்தில், நாட்டின் பயோகாஸ் உற்பத்தியை தற்போதைய அளவைவிட 10 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.block_B

Advertisement