விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுாரை சேர்க்க மக்கள் எதிர்பார்ப்பு

திருக்கோவிலுார்: கண்டாச்சிபுரம் தாலுகாவில் நீதிமன்றம் அமையும் இடம் தேர்வு செய்வதில் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்தில் இணைப்பது தான் தீர்வாகும். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது, திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த திருக்கோவிலுார் தொகுதி மக்களின் வேண்டுகோளாக இருந்தது.

ஆனால் அப்போதைய அரசு, அரசியல் காரணங்களுக்காக திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட 70 சதவீதம் பகுதியை விழுப்புரம் மாவட்டத்திலும் சேர்த்தது.

இதன் காரணமாக திருக்கோவிலுாருக்கு அருகில் ஒரு சில கி.மீ., துாரத்தில் இருக்கும் அரகண்டநல்லுார், மணம்பூண்டி என ஒட்டுமொத்த திருக்கோவிலுார் தொகுதி மக்களும் பல்வேறு நிர்வாக சிக்கல்கள்களை சந்தித்து வருகின்றனர்.

முக்கியமாக திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வந்த கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகாவைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக கண்டாச்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் சிவில் வழக்கிற்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்திற்கும், குற்ற வழக்குகளுக்கு விழுப்புரம் நீதிமன்றத்திற்கும், அரகண்டநல்லுார் காவல் நிலைய எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவெண்ணைநல்லுாருக்கும் மாற்றப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், திருக்கோவிலுாரில் சமீபத்தில் சார்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட பிரிப்பின் காரணமாக வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் பணியின்றி பரிதவிப்பதுடன், பொதுமக்களும் வழக்கு விசாரணைக்காக திருவெண்ணைநல்லுார், விக்கிரவாண்டி, விழுப்புரம் என பல்வேறு நீதிமன்றங்களுக்கு அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இது போலீசாருக்கும் பொருந்தும்.

இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகாவில் நீதிமன்றத்தை ஒதியத்துார், கீழ்வாலை பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பெரும்பாலான வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காரணம் தாலுகாவின் ஒரு மூலையில் நீதிமன்றம் அமைந்தால் பரவலாக இருக்கும் தாலுகா மக்கள் பாதிக்கப்படுவதாகவும், மையப் பகுதியாக இருக்கும் அரகண்டநல்லுார் பாலிடெக்னிக் பகுதியில் அமைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இத்தனை பிரச்னைகளுக்கும் செலவின்றி தீர்வு காண வேண்டுமென்றால் திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ப்பது தான் நீதித்துறைக்கு மட்டுமல்ல அனைத்து துறையையும் மக்கள் எளிதில் அணுக வழி கிடைக்கும். பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வு காண முடியும்.

எனவே திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்தில் இணைப்பதன் மூலம் கண்டாச்சிபுரம் தாலுகா வழக்குகள் முழுவதையும் திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும்.

இதனால் திருக்கோவிலுார் தொகுதி முழுதையும் உள்ளடக்கிய வழக்குகளை ஒரே இடத்தில் சிரமமின்றி கையாள முடியும். அத்துடன் வழக்கு தொடுப்பவர்களும் அலைக் கழிக்கப்படும் அவலத்திற்கு தீர்வு கிட்டும். அரசாங்கமும் புதிதாக ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி செலவு செய்வதைத் தவிர்க்க முடியும்.

மேலும், குறைந்தளவு மக்கள் தொகையை உள்ளடக்கிய அரகண்டநல்லுார் பேரூராட்சியை, திருக்கோவிலுார் பேரூராட்சியுடன் இணைத்து அரசின் கூடுதல் செலவினத்தை குறைப்பதுடன் எதிர்காலத்தில் திருக்கோவிலுார் நகராட்சி, மாவட்ட தலைநகருக்கான அந்தஸ்தை பெரும் என்ற கூற்றையும் முன்வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் சரிசெய்ய தவறிய இப்ப பிரச்சனையை இந்த அரசு செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

Advertisement