சன்மார்க்க சத்திய சங்கத்தினர் சென்னை நோக்கி ஊர்வலம் செல்ல அனுமதி மறுப்பு
வடலுார் , ஆக.11-
சன்மார்க்க சங்கத்தினர் மற்றும், போலீசார் இடையே நடைபயணம் குறித்த பேச்சுவார்த்தை நடந்தது
தமிழக அரசு வடலுாரை புனித நகரமாக அறிவிக்க கோரி அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் சார்பில் சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு மற்றும் பிரசார எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர்.
இதன்படி நாளை வடலுாரில் இருந்து சென்னை கோட்டை வரை பத்து நாட்கள் நடைபெற இருந்த இந்த நடை பயணம் குறித்த பேச்சுவார்த்தை வடலுார் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், சன்மார்க்க சங்க மாநில தலைவர் ஜெய் அண்ணாமலை, மாநில பொது செயலாளர் சாது மகாதேவன், பொருளாளர் பார்த்திபன், துணை பொது செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் நடைபயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பு கருதி சில அறிவுரைகளை டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் வழங்கினார். வடலுாரை புனித நகரமாக அறிவிக்க கோரி பொதுக்கூட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், எதுவாகினும் வடலுாரில் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும், நடை பயணம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் பஸ் மற்றும் கார் மூலம் சென்று மனு கொடுக்க தடை இல்லை என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து விரைவில் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என சன்மார்க்க சங்கத்தினர் தெரிவித்தனர்.