ஆடி அமாவாசையை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

நமது நிருபர் குழு

ஆடி அமாவாசையை ஒட்டி, கோவில்களில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஆடி அமாவாசையை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், எம்.பாப்பம்பட்டி கரியகாளியம்மன் கோவில், சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவில், அத்தனூர் அம்மன் கோவில், காட்டூர் மாகாளியம்மன் கோவில் மற்றும் புடவை காரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

ஆடி அமாவாசையை ஒட்டி, சூலூர் சிவன் கோவில் வளாகம், நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, அன்னூர், ஓதிமலை சாலையில் உள்ள, பெரிய அம்மன் கோவிலில், அம்மனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒட்டர்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில்பாளையம் அருகே கீரணத்தம், கரிய காளியம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், கதவுகரை பகவதி அம்மன் கோவில், கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement