உபகரணங்கள் சேதப்படுத்தினால் நடவடிக்கை: அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழுவினர் அதிரடி

திருப்பூர்:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி உபகரணங்களைச் சேதப்படுத்துவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் உயரிய நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பவானி ஆற்றின் உபரி நீர், குழாய்கள் வழியாக 1,045 குளம் மற்றும் குட்டைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

நீர் வினியோகத்தைச் சீராகக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு நீர்நிலையின் கரையிலும் தானியங்கி வால்வுகள், சென்சார்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், சேவூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள உபகரணங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகளும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் போராட்டக் குழுவினரும் இணைந்து விழிப்புணர்வு எச்சரிக்கை பலகைகளை அமைத்து வருகின்றனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டச் சொத்துகளைச் சேதப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்; இதில் ஈடுபடுவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறுபது ஆண்டுகால தொடர் போராட்டத்திற்குப் பின் சாத்தியமான இத்திட்டத்தின் சொத்துகளைப் பாதுகாப்பதில் உள்ளூர் மக்களும் விவசாயிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் போராட்டக் குழுவினர் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement