பல்துறை ஆராய்ச்சிகள் மிகவும் அவசியம்: பல்கலை துணை வேந்தர் பிரகாஷ் பாபு பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில், உயிரியல் அமைப்புகளில் உலோக அயன்கள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் மூன்று நாள் தேசிய அளவிலான அறிவியல் விரிவுரை பயிலரங்கு துவக்க விழா நடந்தது.

பேராசிரியர் சிவசங்கர் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு பயிலரங்கை துவக்கி வைத்து பேசுகையில், 'தற்போதைய அறிவியல் உலகில் பல்துறை ஆராய்ச்சிகள் மிகவும் அவசியமானவை. இளம் ஆராய்ச்சியாளர்கள் வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதிய மற்றும் புதுமையான அறிவியல் ஆய்வுகளில் கவனத்தை செலுத்த வேண்டும்' என்றார்.

தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பழனியாண்டவர், திருவனந்தபுரம் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் அமைப்பின் பேராசிரியர் சுப்ரதா குண்டு, ரூர்க்கி ஐ.ஐ.டி., பேராசிரியர் சங்கர், பிலாய் ஐ.ஐ.டி., பேராசிரியர் ராமசாமி மயில்முருகன் பேசினர்.

உயிர்வேதியியல் துறையில் உயிர்மூலக்கூறு தொடர்புகள், உயிரியல் மாதிரி வேதியியல், மெட்டலோ என்சைம்கள், நைட்ரைட் செயல்பாட்டு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிலரங்கில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை மாணவர்கள் வல்லுநர்களுடன் கலந்துரையாடினர்.

இன்று 14ம் தேதியுடன் நிறைவு பெறும் இந்த பயிலரங்கில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement