சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

5


புதுடில்லி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் தொடர்ந்து 13வது முறையாக பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.

நாட்டின், 80வது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் டில்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. டில்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்புடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப, 'வீடியோ' பகுப்பாய்வு வசதி கொண்ட ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முக்கியப் பிரமுகர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வரலாற்று சிறப்புமிக்க, டில்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இது பிரதமர் மோடி சுந்திர தினத்திற்கு தேசியக்கொடி ஏற்றுவது தொடர்ந்து 13வது முறையாகும்.


வரவேற்பு




இதற்கிடையே டில்லி செங்கோட்டை வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முன்னதாக, டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


ஒலித்தது வந்தே மாதரம்!




டில்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு சுதந்திர விழா நிகழ்ச்சிக்கள் துவங்கியது. சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றியது இதுவே முதல்முறையாகும்.

Advertisement