தினமலர் செய்தி எதிரொலி: பிஎச்.டி., மாணவர்கள் ஆய்வறிக்கை :துாசு தட்டுகிறது சென்னை பல்கலை

- நமது நிருபர் -

நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னை பல்கலையில் முடங்கிக்கிடந்த பிஎச்.டி., மாணவர்களின் ஆய்வறிக்கை கோப்புகளுக்கு, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கையெழுத்திடும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

நுாற்றாண்டு பழமையான சென்னை பல்கலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பிஎச்.டி., எனும் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பிஎச்.டி., மாணவர்களின் ஆய்வறிக்கை மற்றும் வல்லுநர்களின் பெயர் தேர்வு தொடர்பான கோப்புகள், ஓராண்டாக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக, கடந்த 7ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, துணைவேந்தர் ஒப்புதலுக்காக தேங்கியிருந்த, 300க்கும் மேற்பட்ட பிஎச்.டி., மாணவர்களின் கோப்புகளுக்கு கையெழுத்திடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக, கலை, அறிவியல் பிரிவுகளில் பிஎச்.டி., படிக்கும் மாணவர்களின் ஆய்வறிக்கை தொடர்பான கோப்புகளுக்கு, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு ஒருமனதாக கையெழுத்திட்டு, ஆராய்ச்சித் துறை வல்லுநர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தேங்கியுள்ள அனைத்து கோப்புகளுக்கும் கையெழுத்திட்டு, மாணவர்களுக்கு வழங்க பல்கலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Advertisement