6,000 டன் ரேஷன் அரிசி ஊழல்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

16


-நமது நிருபர்-


புதிதாக அரைத்த 6,000 டன் அரிசிக்கு பதிலாக, அரவை ஆலை உரிமை யாளர்களுடன் கூட்டு சேர்ந்து பழைய அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய ஊழல் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கடையில் விநியோகிப்பதற்காக, அரைக்கப்பட்ட அரிசியை தராமல் மாற்றி தந்து விட்டதாக புகார் வந்தது. அரிசி அரைக்கும் ஆலை உரிமையாளர்கள் உடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்தது முறைகேடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரிசி அரைக்கும் முகவர்களாகச் செயல்படும் நான்கு தனியார் அரிசி ஆலைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட நெல்லில் புதிதாக அரைக்கப்பட்ட அரிசிக்கு மாற்றாக ரூ.10.82 கோடி மதிப்புள்ள 6,000 டன் பழைய அரிசியை வழங்கி முறைகேடு செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

அரைப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய நெல்லிலிருந்து பெறப்பட்ட புதிய அரிசி, தனியார் சந்தைக்குத் திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரிசி அரைக்கும் முகவர்களிடமிருந்து பெறப்பட்ட அரிசியின் தரத்தைச் சரிபார்க்கும் பொறுப்பில் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர், அந்த ஆலைகளுடன் கூட்டுச் சேர்ந்து, பழைய அரிசியைப் பெற்று தானியக் கிடங்குகளில் சேமிக்க அனுமதித்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த முறைகேடு புகாரில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக நான்கு அரிசி அரைக்கும் ஆலையின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, அவற்றை கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த முறைகேடு 2025-26 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றது; மேலும் இது பல மாவட்டங்களில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Advertisement