அரசு மருத்துவமனையில் சிறுநீரக கற்களை அகற்ற நவீன சிகிச்சை முறை



சென்னை, ஆக. 16–

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சையின்றி, நவீன முறையில் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் சாந்தராமன் கூறியதாவது:

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக கற்களுக்கு பெரும்பாலும் மரபணு சார்ந்த காரணிகள் உள்ளன. வழக்கமாக, 1.5 செ.மீ.,க்கும் அதிகமான சிறுநீரக கற்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.

பெரிய வெட்டு காயம் ஏற்படுவதால் அதிக வலி, அறுவை சிகிச்சை தழும்பு மற்றும் நீண்டகால தொடர் சிகிச்சைகள் தேவைப்படும்.

இதை தவிர்க்க, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட நவீன சிகிச்சை முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தோலில் மிகச்சிறிய துவாரம் வழியாக சிறுநீரகத்தை அணுகி, கற்களை உடைத்து அகற்றப்பட்டது.

குழந்தைகளின் சிறிய உடல் அளவு, சிறுநீரகத்தில் அதிக ரத்த நாளங்கள் மற்றும் மயக்க மருந்தின்போது சுவாசக் குழாயை நிர்வகிப்பது உள்ளிட்ட சவால்கள் இருந்தன.

நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் துல்லியமாக திட்டமிட்டு சிகிச்சையை மேற்கொண்டனர். மேலும், மயக்க மருந்து அளிக்கும்போது சுவாசக் குழாயை எளிதாக கையாளும் வகையில், வழக்கமான குப்புற படுக்கும் நிலைக்கு பதிலாக மல்லாந்து படுத்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் மூலம், 2025 ஜூலை முதல் தற்போது வரை, 14 குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இச்சிகிச்சை முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement