அரசு தேங்காய் கொள்முதல் செய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை

கம்பம், ஆக. 16

கொப்பரைக்கு பதிலாக தேங்காய்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு, கட்டுபடியான விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. திடீர் விலை உயர்வு கிடைக்கும். அப்போது மகசூல் இருக்காது. கோயில் திருவிழாக்கள், பண்டிகை நாட்களில் தேங்காய்க்கு விலை உயர்வு கிடைக்கும். அதனால் எந்த பயனும் இல்லை. தேனி மாவட்ட விவசாயிகள் கொப்பரையை விரும்புவதில்லை. காரணம் மாவட்டத்தில் உள்ள சீதோஷ்ண நிலை கொப்பரைக்கு சரிப்பட்டு வராது என்கின்றனர்.

தென்னை விவசாயிகள் கூறியதாவது: ஒரு கிலோ தேங்காய் உற்பத்தி செய்ய ரூ.150 வரை செலவாகிறது. 50 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் பறிக்கும் கூலி அதிகம். காய் பறிப்பவர்கள் 5 காய் எடுத்து கொள்வார். வாங்கும் வியாபாரி சிறிய காய்களை வாங்குவதில்லை. வாங்கும் காய்களுக்கு லாப காய் என்று 100 க்கு 15 காய் எடுத்து கொள்வார்கள். இது தவிர பறித்து போட்ட காய்களை சேகரிக்க கூலி தர வேண்டும். தற்போது வெள்ளை ஈ தாக்குதலால் மகசூலும் குறைந்து வருகிறது. இந்நிலையில் விலை நிலையாக இருப்பதில்லை. விலை குறைந்து வருவது விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது. எனவே அரசு கொப்பரையை தவிர்த்து தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement