ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த கோரிக்கை

திருப்புவனம்,ஆக.18-

திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன. எனவே பொது மக்கள் பலரும் ஷேர் ஆட்டோக்களை நம்பியே பயணம் செய்கின்றனர்.

திருப்புவனத்தில் சிவகங்கை ரோடு, நரிக்குடி ரோடு, கோட்டை பஸ் ஸ்டாப், தி.புதூர், மடப்புரம் உள்ளிட்ட இடங்களில் ஷேர் ஆட்டோ ஸ்டாண்ட்கள் உள்ளன. இங்கிருந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சங்கம் இல்லை. சிலர் எந்த வித ஆவணங்கள், உரிமம் இன்றி ஷேர் ஆட்டோக்களை இயக்குகின்றனர்.

பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அடிக்கடி பஸ் ஸ்டாப்களில் மோதி கொள்கின்றனர். சீருடை அணியாமல் ஆட்டோக்களை இயக்குவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களுக்கு என தனியாக இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்றாமல் ஆட்டோக்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டோக்களில் உரிய ஆவணங்கள் உள்ளனவா என அடிக்கடி சோதனை நடத்த வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement