பஸ்கள் மோதி விபத்து: தப்பிய பயணியர்

புளியந்தோப்பு: மாநகர பேருந்தும், கல்லுாரி பேருந்தும் மோதிய விபத்தில், பயணியர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்தனர்.

பெரம்பூரில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் தடம் எண்: 29சி பேருந்து, நேற்று காலை 8:00 மணியளவில், ஓட்டேரி அருகே சென்றது. அந்நேரம் பெரம்பூரில் உள்ள செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் கல்லுாரி பேருந்தும், அவ்வழியாக வந்தது. ஒன்றையொன்று முந்திக் கொண்டு சென்றுள்ளன.

மேட்டுப்பாளையம், குக்ஸ் சாலையில் வலது பக்கம் திரும்பும்போது, இரு பேருந்துகளும் மோதிக் கொண்டன. இதில், மாநகர பேருந்தின் வலது பக்க கண்ணாடியும், கல்லுாரி பேருந்தின் இடது பக்க சிறிய கண்ணாடியும் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு காயம் ஏற்படவில்லை.

விபத்து குறித்து, தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுநரான வியாசர்பாடியைச் சேர்ந்த கஜேந்திரன், 40 மற்றும் மாநகர பேருந்து ஓட்டுநரான எட்வின் பிரபு, 36 ஆகியோரிடம், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement