அணு விபத்துக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றங்களுக்கு தடையா?

4

புதுடில்லி: அணு விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோருக்கு நியாயமான மற்றும் உரிய இழப்பீடு வழங்கும் அதிகாரம், 'ஷாந்தி' சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம் நாட்டின் அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் வகையில், கடந்த ஆண்டு, 'ஷாந்தி' சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது, பழைய அணுசக்தி சட்டம் - 1962, அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் - 2010 ஆகியவற்றுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, அணு விபத்து ஏற்பட்டால், அணு உலையின் உற்பத்தித் திறனை பொறுத்து, தனியார் நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீடு பொறுப்பு, 100 கோடி ரூபாய் முதல் 3,000 கோடி ரூபாய் வரை என, வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டு தொகை இந்த வரம்பை மீறினால், மீதி பொறுப்பை மத்திய அரசே ஏற்கும்.

கட்டுப்பாடு:



அணு சக்தி துறை தனியாருக்காக திறக்கப்பட்டாலும், யுரேனியம் செறிவூட்டல், அணுக்கழிவுகளை கையாளுதல், அதன் மேலாண்மை மற்றும் கனநீர் உற்பத்தி ஆகியவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இது தொடர்பான வரைவு விதிகள், கடந்த 14ல் தான், மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கருத்து கேட்புக்காக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. வரும், செப்., 4 வரை கருத்துக்கள் வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பார்லி., நிலைக்குழுவும், தனியார் நிறுவனங்களின் தகுதி மற்றும் தொழில்நுட்பத் திறன் குறித்து ஆய்வு செய்து இந்த விதிகளில், சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

முரண்பாடு



இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி இ.ஏ.எஸ். சர்மா தலைமையிலான பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஷாந்தி சட்டம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 14, 19 மற்றும் 21 வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. விபத்து ஏற்படும் பட்சத்தில், அணுமின் நிலையங்களை இயக்கும் தனியார் நிறுவனங்களின் இழப்பீடு பொறுப்பு, 3,000 கோடி ரூபாய் என, வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளில் சமரசம் செய்து கொள்ள வழிவகுக்கும். தவிர, அணுமின் நிலையங்களை இயக்கும் பொறுப்பில் உள்ள அணுசக்தி ஆணையமே ஒழுங்குமுறை வாரிய உறுப்பினர்களை பரிந்துரைப்பது அப்பட்டமான நலன்சார் முரண்பாடாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் எழுப்பிய அச்சங்கள் குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''பார்லி., சட்டப்பூர்வமாக இழப்பீட்டு வரம்பை நிர்ணயித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது. இதை ஷாந்தி சட்டம் பறிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது,'' என சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க அவர் உத்தரவிட்டார்.

@block_B@

வரைவு விதிகள் எப்போது அமலாகும்?


மக்களிடம் கருத்து கேட்பு காலம் முடிந்த பின், பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும். தொடர்ந்து, வரைவு விதிகள் இறுதி செய்யப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்படும். அதன் பின்னரே விதிகள் நடைமுறைக்கு வரும்.block_B

Advertisement