அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்

2

@block_G@block_G புதுடில்லி: ''பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும்; இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த இரண்டு நாள் பொதுத்துறை வங்கி மாநாட்டின் நிறைவு விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொதுத்துறை வங்கிகள் ஜென்-சி தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் எளிய, நவீன மற்றும் 24 மணி நேர டிஜிட்டல் சேவைகளை வழங்க வேண்டும்.

அக்டோபர் 2 முதல் ஒரு மாத காலத்திற்கு 'இளைஞர்களுக்கான வங்கிச் சேவை' என்ற பிரசாரத்தை அரசு வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும்.

இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்களுடன் வளர்ந்த இளைஞர்களுக்கு எளிமையான, நவீன முறையிலான வங்கி சேவைகள் தேவைப்படுவதை உணர வேண்டும்; வங்கி கிளைகளுக்கு வருபவர்களுக்காகக் காத்திராமல், கல்லூரிகள் மற்றும் கல்வி வளாகங்கள் மூலமாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர், அரசுத் திட்டங்கள் மற்றும் முறையான கடன் முறைகள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும். ஒரு இளைஞர் வங்கிக்குள் நுழையும் போது, அவர்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும்.

அப்பொழுது தான் அந்த இளைஞர், ஒவ்வொரு வங்கித் தீர்வுக்கும், என்னிடம் ஏற்கனவே ஒரு வங்கி இருக்கிறது என எண்ணம் மனதில் தோன்றும்; அந்த வங்கி, வீட்டுக் கடன்களுக்கு மட்டும் நன்றாக இருந்து, மற்றபடி நன்றாக இல்லை என்பது போல இருக்கக்கூடாது.

பொதுத்துறை வங்கிகள் இளம் இந்தியர்களின் முதல் மற்றும் மிகவும் நம்பகமான தேர்வாக இருக்க வேண்டும். இளைஞர்களைக் கவர, வங்கிகள் தங்கள் வங்கிச் சேவைகளுடன், உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்களுக்கான ஆபர் கூப்பன்கள், வவுச்சர்கள் ஆகியவற்றை சேர்த்து வழங்கலாம்.

வாடிக்கையாளர்களை நன்கு புரிந்துகொண்டு, காலப்போக்கில் அவர்களின் தேவைகள் எவ்வாறு மாறும் என்பதை முன்கூட்டியே கணிக்க வேண்டும்
ஒரு இளம் மாணவர் ஊழியராகவோ அல்லது தொழில்முனைவோராகவோ மாறுகிறார். ஒரு குறுந்தொழில், சிறு நிறுவனமாகவும் பின்னர் நடுத்தர நிறுவனமாகவும் வளர முடியும்.

ஒரு வைப்புத்தொகையாளர், முதலீட்டாளராகவும், அதிக வரவு, செலவு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளராகவும் மாற முடியும். இந்த மாற்றங்களின்போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Advertisement