கிராமங்களில் எம்.ஆர்.பி.,யை விட உர மூட்டைகள கூடுதல் விலை: தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கவனிப்பார்களா?
விழுப்புரம் மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் அதிகளவில் நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து, எள் மற்றும் பனிப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பயிர்களுக்குத் தேவையான சத்துகளுக்கு இயற்கை உரங்களைவிட, ரசாயன உரங்களை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகளவிலான விளைச்சல் கிடைக்கிறது என்பதால், ரசாயன உரங்களான யூரியா, டி.ஏ.பி., - பொட்டாஷ், பாக்டம்பாஸ், அம்மோனியா சல்பேட் மற்றும் குளோரைடு, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட உரங்களை சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த உர மூட்டைகளின் விலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
விழுப்புரம் நகரில் உள்ள உரக் கடைகளில் ஒரு மூட்டை யூரியா 266 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள சில கடைகளில் யூரியா ஒரு மூட்டை 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
இதேபோன்று, 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பாக்டம்பாஸ் 2,000 ரூபாய்க்கு என ஒவ்வொரு உர மூட்டைகளிலும் 100 நுாறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
அதிலும், உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி., எனப்படும் விற்பனை விலையைவிட 100 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி பெரும்பாலான உரக் கடைகளில் விலைப் புள்ளி பட்டியல் எழுதுவது இல்லை. இதனால், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், கூடுதல் விலை கொடுத்து உரங்களை வாங்கிச் செலும் நிலை உள்ளது.
மாவட்ட வேளாண் துறை சார்பில் அனைத்து உரக் கடைகளிலும் இருப்பு மற்றும் விலைப் புள்ளிகள் தொடர்பாக பலகை வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வபோது அறிக்கை விடுக்கின்றனர். அந்த அறிக்கையை கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான உரக் கடைகள் பின்பற்றுவதில்லை.
எனவே, வேளாண் துறை அதிகாரிகள், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிக்கை மட்டுமே வெளியிடாமல், கிராமங்களில் உள்ள உரக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது
-
அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி