வாய்க்கால் அடைப்புகளை அகற்றும் பணி துவக்கம்
புதுச்சேரி: வாய்க்கால்கல் அடைப்புகளை நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணியினை சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையின் பாதாள சாக்கடை வாய்க்கால்களில் ஏற்படும் அடைப்புகளை நவீன இயந்திரம் அகற்றும் பணி, உப்பளம் தொகுதி அம்பேத்கர் பிரதான சாலையில் நேற்று துவங்கியது.
இப்பணியினை சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர். தலைமை பொறியாளர் வீரசெல்வன், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர்கள் சுந்தரி, ஸ்ரீநிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
பின், அமைச்சர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறுகையில், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனால், புதுச்சேரியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது கடினமாக இருந்தது. இதற்கிடையே, பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திரத்தின் நிறுவனத்தினர், முதல்வரை சந்தித்தனர். அதற்கு முதல்வர், பரிட்சார்த்த முறையில் 6 மாதம் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வோம். அதன்பின், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களுக்கு எத்தனை இயந்திரங்கள் தேவை இருக்கிறது என்பதை கணக்கிட்டு வாங்கலாம்’ என்றார்.
அதன் அடிப்படையில் பரிட்சார்த்த முறையில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நேற்று துவங்கப்பட்டது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதாள சாக்கடை முழுதும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையிலான திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகளை உடனே துவங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.