கோவை மூன்றாவது வெற்றி * சேப்பாக்கம் அணி ஏமாற்றம்

சென்னை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில், கோவை அணி 5 விக்கெட்டில் சேப்பாக்கம் அணியை வீழ்த்தியது.
டி.என்.பி.எல்., இரண்டாவது கட்ட போட்டிகள், சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கின. இதில் சேப்பாக்கம்-கோவை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
சேப்பாக்கம் அணிக்கு மோகித் ஹரிஹரன் (13), கேப்டன் ஜெகதீசன் (6) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. பின் இணைந்த ராம் அர்விந்த், சுவப்னில் சிங் ஜோடி அணியை மீட்டது. அர்விந்த், 28 பந்தில் அரைசதம் விளாசினார். பின் ஆகாஷ் (10) ஓவரில், அர்விந்த் 2 சிக்சர் அடிக்க, சேப்பாக்கம் அணி 10 ஓவரில் 100/3 ரன் எடுத்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, அர்விந்த் (63) அவுட்டானார். அஷ்வந்த் (5), பிரசாத் (12) ரன் மட்டும் எடுத்தனர். சுவப்னில் (20), தினேஷ் ராஜ் (32) சற்று உதவினர். சேப்பாக்கம் அணி, 19.3 ஓவரில் 167 ரன்னில் ஆல் அவுட்டானது. கோவை சார்பில் அம்ப்ரிஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
கோவை அணிக்கு ராதாகிருஷ்ணன் (38), சுரேஷ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது, பாலசுப்ரமணியம் சச்சின் (37) அவுட்டானார். சுரேஷ் 40 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஷாருக்கான் (25) கைகொடுக்க, கோவை அணி 18.5 ஓவரில் 171/5 ரன் எடுத்து, இத்தொடரில் 3வது வெற்றி பெற்றது.

Advertisement