பட்டையை கிளப்பிய ரிஷாப் பன்ட் * வெற்றியை நோக்கி இந்தியா

காலே: காலே டெஸ்டில் ரிஷாப் பன்ட் அரைசதம், பவுலர்கள் அசத்த, இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், காலே சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 462, இலங்கை 284 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில், இந்தியா 178 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (0) மீண்டும் ஏமாற்றினார். தேவ்தத் படிக்கல், ராகுல் பொறுப்பாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தனர். ராகுல், 35 ரன் எடுத்தார். கேப்டன் சுப்மன் கில் (8) நிலைக்கவில்லை.
ரிஷாப் அரைசதம்
அடுத்து வந்த 'கீப்பர்-பேட்டர்' ரிஷாப் பன்ட், ஒருநாள் போட்டி போல அதிவேகமாக ரன் சேர்த்தார். தேவ்தத், 44 ரன்னுக்கு வெளியேறினார். துருவ் ஜுரல் (7) சோபிக்கவில்லை. நுவந்தா ஓவரில் (36வது) 3 பவுண்டரி அடித்த ரிஷாப், ஸ்கோரை உயர்த்தினார். 53 பந்தில் அரைசதம் எட்டிய ரிஷாப், 66 ரன்னுக்கு (69 பந்து, 8x4, 2x6) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா, 9 ரன் எடுத்தார். 'டெயிலெண்டர்கள்' தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை சேர்த்து, இலங்கைக்கு 372 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
சுதார் அசத்தல்
பின் மழை குறுக்கிட, ஆட்டம் துவங்குவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், இந்திய பவுலர்கள் விக்கெட் வேட்டையை துவக்கினர். கடின இலக்கை துரத்திய இலங்கை அணி துவக்கத்திலேயே அதிர்ந்தது. சிராஜ் 'வேகத்தில்' நிஷான் மதுஷ்கா (6) வெளியேறினார். மானவ் சுதார் 'சுழலில்' சூரியபண்டாரா (0) சிக்கினார். பிரசித் கிருஷ்ணாவிடம் கமிந்து மெண்டிஸ் (2) 'சரண்டர்' ஆனார். சுதார் வலையில் லஹிரு உதாரா (16) வீழ்ந்தார். நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 84/4 ரன் எடுத்து, 288 ரன் பின்தங்கியிருந்தது. போராடிய கேப்டன் தனஞ்சயா டி சில்வா (31), சோனல் தினுஷா (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இலங்கையின் எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி, இமாலய வெற்றி பெற இந்திய அணி காத்திருக்கிறது.

'சேஸ்' செய்ய முடியுமா

காலே மைதானத்தில் அதிகபட்சமாக 344 ரன்னை பாகிஸ்தான் அணி (எதிர், இலங்கை, 2022) 'சேஸ்' செய்தது. இதனால் இந்தியா நிர்ணயித்துள்ள 372 ரன்னை இலங்கை எட்டுவது கடினம். மழையின் கருணையை இலங்கை எதிர்பார்க்கலாம்.

100 சிக்சர்
டெஸ்ட் அரங்கில் 100 சிக்சர் விளாசிய முதல் இந்திய வீரர் என ரிஷாப் பன்ட் சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக நான்காவது வீரர். இதற்கு முன் இம்மைல்கல்லை பென் ஸ்டோக்ஸ் (இங்கி., 122 போட்டி, 138 சிக்சர்), பிரண்டன் மெக்கலம் (நியூசி., 101 போட்டி, 107 சிக்சர்), கில்கிறிஸ்ட் (ஆஸி., 96 போட்டி, 100 சிக்சர்) எட்டினர்.
* டெஸ்டில் அதிவேகமாக 100 சிக்சர் அடித்தவர் பட்டியலில் ரிஷாப் (51 போட்டி) முதலிடம் பெற்றார். முன்னதாக ஸ்டோக்ஸ் 82வது போட்டியில் 100 சிக்சர் எட்டியிருந்தார்.
* டெஸ்டில் குறைந்த பந்துகளில் 100 சிக்சர் அடித்தவர் வரிசையில் ரிஷாப் (4918 பந்து) முதலிடம் பெற்றார். அடுத்த இடங்களில் கில்கிறிஸ்ட் (6578), ஸ்டோக்ஸ் (9042), பிரண்டன் மெக்கலம் (9756) உள்ளனர்.

பறந்த பந்து
* நேற்று அதிரடியாக ஆடிய ரிஷாப் பன்ட், லஹிரு குமாரா மணிக்கு 133.6 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தில் (26.1) இமாலய சிக்சர் அடித்தார். இது காலே மைதானத்திற்கு வெளியே பறந்து சென்று, தெருவில் விழுந்தது. வேறுவழியின்றி அம்பயர்கள் பந்தை மாற்றினர். தொடர்ந்து லஹிரு பந்தில் (36.4) இன்னொரு சிக்சர் அடித்த ரிஷாப், டெஸ்டில் 20வது அரைசதம் எட்டினார். இது, டெஸ்டில் இவரது 100வது சிக்சராகவும் அமைந்தது.

சண்டிமால் காயம்
நுவந்தா ஓவரில் (3.6), ராகுல் அடித்த பந்தை தடுக்க முயற்சித்தார் இலங்கையின் சண்டிமால். அப்போது எல்லை அருகே விழுந்ததில் வலது தோள்பட்டை, கழுத்து, தலை பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு 'ஸ்கேன்' பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு எதுவும் இல்லை. இவருக்கு பதிலாக 'கன்கஷன்' மாற்று வீரர் விதிமுறைப்படி பசிந்து சூரியபண்டாரா அறிமுக வாய்ப்பு பெற்றார்.

Advertisement