போலி பட்டாவை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு

குளித்தலை:குளித்தலை அடுத்த வயலுார் பஞ்., நடுப்பட்டி கிராம மக்கள், ஆர்.டி.ஓ., சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குளித்தலை அடுத்த வயலுார் பஞ்., நடுப்பட்டி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு நடுவே, கடந்த, 2015ல் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலை அருகிலுள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை, கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் சிமென்ட் சாலை மற்றும் நத்தம் புறம்போக்கு இடத்தை, அதே ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், 'எங்களுக்கு சொந்தமான இடம்; யாரு இந்த சிமென்ட் சாலை மற்றும் காலிமனையை பயன்படுத்தக் கூடாது' எனக்கூறி, மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நத்தம் புறம்போக்கு இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement