துார் வாரப்படாத கழிவுநீர் கால்வாய்கள்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை முழுமையாக துார்வார வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காந்திவீதி, மஜித்ரோடு, நேருபஜார், போஸ் ரோடு, மேற்குரத வீதிகளில் நகரின் முக்கிய வணிக வளாகங்கள் இயங்கி வருகிறது.

நகராட்சியில் 2007 ஆம் ஆண்டு மார்ச்சில் ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு பணி முடிந்துள்ளது.

தற்போது வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி நடக்கிறது. நகரில் 90 சதவீத வீடுகளுக்கு இணைப்பு பணி முடிந்துள்ளது.

நகரில் உள்ள வார்டுகளில் ஏற்கனவே கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள கால்வாய்கள் அனைத்து இடங்களிலும் இருந்தன. இக்கால்வாய்களும், மழைநீருக்கான வரத்துக் கால்வாய்களும் ஆக்கிரமிப்பு மற்றும் அடைபட்டு உள்ளது.

வாரச்சந்தை ரோட்டில் தெப்பக்குளத்திற்கு வரக்கூடிய மழைநீர் கால்வாயில் கழிவு நீர் விடப்படுகிறது. இந்த கால்வாய்க்கு அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பல இடத்தில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. போஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அரண்மனை வாசலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லக்கூடிய கால்வாய், காந்திவீதியில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிர்புறம் செல்லக்கூடிய கால்வாய்களில் மழை பெய்தால் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து ரோட்டில் ஓடுகிறது.

துர்நாற்றம் வீசி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இக்கால்வாய்களில் அள்ளப்படாத குப்பை, பாலிதீன் பை தேங்கியுள்ளது. இதனால் கழிவு நீர் முற்றிலும் செல்ல முடியாத நிலை உள்ளது.

நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள கழிவுநீர், மழைநீர் கால்வாய்களை முழுமையாக துார்வார வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement