மறைப்பரப்பு தந்தையரின் ஆன்மிக பணி ஹீலியம் பலுான் பறக்கவிடப்பட்டது

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘மிஷன்ஸ் எட்ரேஞ்சரஸ் தெ பாரிஸ்’ மறைபரப்பு தந்தையர்களின் 250 ஆண்டு கால ஆன்மிகப்பணியை கொண்டாடும் விழாவை முன்னிட்டு நேற்று ஹீலியம் பலுான் பறக்கவிடப்பட்டது.

புதுச்சேரியில் ‘மிஷன்ஸ் எட்ரேஞ்சரஸ் தெ பாரிஸ்’ மறைபரப்பு தந்தையர்களின் 250 ஆண்டுகால ஆன்மிகப்பணி மற்றும் மறைப்பணி பராம்பரியத்தை கொண்டாடும் வகையில், புதுச்சேரி – கடலுார் உயர்மறைமாவட்டம் சார்பில், புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளி வளாகத்தில், வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் விழா நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, ஹீலியம் பலுான் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

புதுச்சேரி – கடலுார் உயர்மறைமாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஹீலியம் பலுான் பறக்க விடுவதை துவக்கி வைத்தார். புதுச்சேரி – கடலுார் உயர்மறைமாவட்ட முதன்மை குரு மோன்சின்யோர் குழந்தைசாமி, விகார் ஜெனரல் பிலோமின்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பெத்தி செமினார் பள்ளி முதல்வர் அரோக்கியராஜ் செய்திருந்தார்.

பெத்தி செமினார் பள்ளியில் மூன்று நாட்கள் நடக்கும் ‘மிஷன்ஸ் எட்ரேஞ்சரஸ் தெ பாரிஸ்’  மறைபரப்பு தந்தையர்களின் 250 ஆண்டுகால ஆன்மிகப் பணிகள் மற்றும் மறைப்பணி பாரம்பரிய விழாவில், பல்வேறு நாடுகள், மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ‘மிஷன்ஸ் எட்ரேஞ்சரஸ் தெ பாரிஸ்’ அருட்தந்தையர்கள், பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில், குருக்கள், துறவியர், இறைமக்கள், முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

Advertisement