நாளை ஓணம்: கேரளம்  சென்ற 22 டன் வாடாமல்லி பூக்கள்

திண்டுக்கல், ஆக.25

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப்பட்டி, சுக்காம்பட்டி, கோமையன்பட்டி சுற்று வட்டார பகுதிகள், நிலக்கோட்டை பகுதிகளில் வாடாமல்லி பூக்கள் சாகுபடி ஆகிறது. கேரளத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை (ஆக.,26) கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு அம்மாநிலத்தின் கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வாடாமல்லி கிலோ ரூ.60 என்ற விலையில் 22 டன் பூக்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அனுப்ப தோவாளை பகுதிக்கு வாடாமல்லியுடன் இணைந்த துளசி கட்டுக்கள், பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், வெள்ளை செவ்வந்தி, மல்லி, செண்டுமல்லி பூக்கள் டன் கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் பூ மார்க்கெட் வியாபாரி வேளாங்கன்னி ரீகன் கூறுகையில், ‘ஓணம் பண்டிகைக்கு வழக்கமாக வாடாமல்லி பூக்களை அதிகளவில் அனுப்பி வைப்போம். இன்று (நேற்று) 22 டன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாடாமல்லி கிலோ ரூ.60, விருட்சிப்பூ ரூ.180, பன்னீர் ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250, செண்டுமல்லி ரூ.110, வெள்ளை செவ்வந்தி ரூ.110, மல்லி கிலோ ரூ.1300க்கு விற்பனையானது. இதுதவிர தேவையின் கருதி கோழிக்கோடு வியாபாரிகள் பூக்களை வாங்கிச்சென்றனர் என்றார்.

Advertisement