ரூ.14.50 கோடி தாய்லாந்து கஞ்சா கடத்திய பெண்; சென்னையில் கைது

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 14.50 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த 35 வயது பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காங்கில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணியர் விமானம் வந்தது. பயணியரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று திரும்பிய, 35 வயதுடைய வட மாநில பெண்ணின் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடைமைகளை சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, தாய்லாந்து நாட்டு பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுடன், 14.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அப்பெண் கைது செய்யப்பட்டார். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பெண் தாய்லாந்தில் யாரிடம் கஞ்சா வாங்கினார்; அதை சென்னையில் யாரிடம் ஒப்படைக்க இருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Advertisement