ஓணம் வந்தல்லோ!
கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளும், அம்மாநில மக்களின் முக்கியப் பண்டிகையுமான ஓணம் பண்டிகை தமிழகத்திலும், குறிப்பாகச் சென்னையிலும் வாழும் மலையாளி மக்களால் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவன் மையங்களில் சிறப்பு மலையாள பண்பாட்டுத் திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன.
விழாவில் பங்கேற்ற மலையாள பெண்கள் மற்றும் சிறுமிகள் அனைவரும் ஓணம் பண்டிகையின் அடையாளமான கேரள பாரம்பரிய 'கசவு' புடவைகள் மற்றும் பாவாடை சட்டைகளை அணிந்து வந்திருந்தனர். ஆண்கள் பாரம்பரிய கரைகட்டிய முண்டு அணிந்து, குடும்பத்தினருடன் இணைந்து உற்சாகமாகப் பங்கேற்றனர்.
பாரதிய வித்யா பவன் அரங்கங்களில் கேரளாவின் தொன்மை வாய்ந்த நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நடனங்கள் மேடையேற்றப்பட்டன. கேரளாவின் தனித்துவமான நகைச்சுவை மற்றும் கதைசொல்லல் கலையான 'ஒட்டன் துள்ளல்' நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.ஒட்டன் துள்ளல் என்பது சாதாரண மக்களுக்கான ஒரு "சமூக விமர்சனக் கலை" . தெருக்கூத்து மற்றும் ஏழை எளிய மக்களின் மனக்குறைகளைப் பிரதிபலிக்கும் கலை வடிவமாகத் தொடங்கி, இன்று கேரள பண்பாட்டின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறதுபெண்கள் வட்டமாக நின்று, கைகளைக் கொட்டிப் பாடி ஆடும் பாரம்பரிய 'திருவாதிரைக்களி' நடனம் அரங்கை நெகிழச் செய்தது.
விழாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், ஆளை மயக்கும் அதிரடிச் 'செண்டை மேளம்' இசைக்கப்பட்டது. மேள தாளங்களின் முழக்கத்திற்கு ஏற்பக் கலைப் பிரியர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர். மேலும், ஓணம் பண்டிகையின் மகிமையைப் போற்றும் பாரம்பரிய 'ஒணப்பாட்டுகள்' (நாட்டுப்புறப் பாடல்கள்) இசைக்கப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் திருவோண நல்வாழ்த்துகள் பரிமாறப்பட்டன.
சென்னையில் வசிக்கும் மலையாளி மக்கள் தங்களின் பண்பாட்டு வேர்களை மறவாமல், கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் ஒன்று கூடி ஓணம் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடியது சென்னைவாழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படங்கள்:யுவராஜ்.