வீட்டின் சாவியை வைத்து கொலையாளி கண்டுபிடிப்பு
துமகூரு: துமகூரு மாவட்டம், சிக்கநாயகனஹள்ளி தாலுகாவின் அஷ்ரிஹாள் கிராமத்தின் புறநகரில், ஒரு மாதத்துக்கு முன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அரை, குறையாக எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்தது. தகவலறிந்து அங்கு வந்த சிக்கநாயகனஹள்ளி போலீசார், உடலை மீட்டனர்.
முகமும், உடலும் பெரும்பகுதி எரிந்திருந்ததால், அந்த பெண்ணை அடையாளம் காண்பது, போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. பெண்ணை பற்றி தகவல் கூறுவோருக்கு, 25,000 ரூபாய் வெகுமதி அளிப்பதாக அறிவித்தனர்.
இதற்கிடையே குப்பி தாலுகாவின் சி.என்.புரா போலீஸ் நிலையத்துக்கு வந்த இளைஞர், தன் தாயார் லட்சுமி தேவம்மா, 55, என்பவரை காணவில்லை என, புகார் அளித்தனர். இது பற்றி அனைத்து போலீஸ் நிலையத்துக்கும், தகவல் அனுப்பப்பட்டது.
அப்போது லட்சுமிதேவம்மா காணாமல் போன தேதியுடன், அஷ்ரிஹாளில் பெண்ணின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட நாளை ஒப்பிட்டு பார்த்த போது, அந்த பெண் காணாமல் போன லட்சுமி தேவம்மாவாக இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் கிடைத்த சாவியை எடுத்து கொண்டு, போலீசார் லட்சுமி தேவம்மாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவில் பூட்டியிருந்த பூட்டில் பொருத்தி பார்த்த போது, திறந்து கொண்டது. எரிந்து கிடந்த பெண் லட்சுமி தேவம்மா என்பது உறுதியானது.
லட்சுமி தேவம்மாவின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை, ஆய்வு செய்த போது, குப்பியின் பிரபுவனஹள்ளி கிராமத்தின் நாகராஜ், 50, பற்றி தடயம் கிடைத்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார், விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவருக்கும், லட்சுமி தேவம்மாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. இது அவர்களின் மனஸ்தாபத்துக்கு காரணமானது. லட்சுமி தேவம்மாவை நாகராஜ் பைக்கில், அஷ்ரிஹாள் கிராமத்தின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.
தன் கூட்டாளியின் உதவியுடன், உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.