கண்டரமாணிக்கம் இணைப்பு ரோடு இரு வழிச்சாலையாக்க கோரிக்கை

திருப்புத்துார்,ஆக.26-

கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் -பட்டமங்கலம் -திருக்கோஷ்டியூர் இணைப்பு ரோட்டை முழுமையாக விரிவுபடுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.

8 கி.மீ. நீளமுள்ள இந்த இணைப்பு ரோட்டில் கடந்த ஆண்டு உதிரப்பட்டி முதல் திருக்கோஷ்டியூர் வரை விரிவுபடுத்தும் பணி நடந்தது. கண்டரமாணிக்கம் முதல் உதிரப்பட்டி வரை சிங்கிள் ரோடாக உள்ளது. அதில் பல இடங்களில் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனப் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.

குறிப்பாக தினசரி 20க்கும் மேற்பட்ட பள்ளி பஸ்கள் இந்த ரோட்டில் செல்கிறது. கண்டரமாணிக்கம்- பட்டமங்கலம் ரோட்டில் இருபுறமும் மண் அரித்து பள்ளங்கள் உள்ளதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

இந்த ரோட்டை இருவழிச்சாலையாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த இப்பகுதியினர் கோரியுள்ளனர். மேலும் பட்டமங்கலம் கடை வீதி, திருப்புத்துார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் மழை காலத்திற்கு முன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறையினரை கிராமத்தினர் கோரியுள்ளனர்.

பட்டமங்கலம் ஆறுமுகம் கூறுகையில்,‛ கண்டரமாணிக்கம் -திருக்கோஷ்டியூர் இணைப்பு ரோட்டை இருவழிச்சாலையாக்க கோரினோம். பாதி ரோடே விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முழுமையாக விரிவுபடுத்த வேண்டும். மேலும் சொக்கநாதபுரம் செல்லும் ரோட்டில் மணிமுத்தாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு நிதி ஒதுக்கி பாலம் அமைக்க வேண்டும்’ என்றார்.

Advertisement