இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் காலி மதுபாட்டில்கள் சமூக வலைத் தளங்களில் வீடியோ வைரல் 

புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனையின் படிகட்டில், காலி மதுபாட்டில்கள் கிடந்த குறித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 

கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனைக்கு தினமும், புதுச்சேரி மற்றும் புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனை முறையான பராமறிப்பின்றி கிடப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் மாடிப் படிக்கட்டில் காலி மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அங்கு குப்பைகளும் தேங்கி துர்நாற்றம் வீசியதால், மருத்துவமனைக்கு சென்ற

பொது மக்களும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. துாய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமறிக்கப்பட வேண்டிய மருத்துவமனை வளாகத்தில், மது பாட்டில்களும், குப்பைகளும் கிடப்பதை பொது மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இது பெரும் பரபரப்பையும், அரசின் மீதான பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement